கருணை அடிப்படையில் பணிக்காலத்தில் இறந்த மத்திய அரசு ஊழியர் குடும்ப வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கும் முறையை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்கிற பெயரில், வெறும் ஐந்து சதமாக வெட்டிக் குறைத்தது மத்திய அரசு. ஆனால் கூட்டு ஆலோசனைக் குழு விவாதத்தின் போது அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைக் காட்டுமாறு ஊழியர் தரப்பு கோரியபோது அரசால் எந்த வழிகாட்டுதலையும் காட்ட இயலவில்லை. ஆனாலும் ஐந்து சதம் என்பதை மாற்ற மறுத்து வருகிறது. அமைச்சகச் செயலாலர் இப்பிரச்சனையை மீண்டும் பரிசீலிக்க ஒத்துக்கொண்ட பின்பும் இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த நிபந்தனை ரயில்வே துறையில் மட்டும் அமுலாக்கப்படாமல் தொடர்ந்து தடையற்ற வகையில் பணி நியமனங்கள் அமுலாகி வருகின்றன. இதர துறைகளில் மறுக்கப்படுகிறது.
அஞ்சல் துறையில் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பின்பு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசுகளைக் கூட பணி வழங்காமல் வெளியேற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் பெயரால் வெளியிடப்பட்ட அரசின் உத்தரவு வெளியாவதற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட வெளியேற்றியே தீருவேன் என்று அஞ்சல் இலாகா உறுதியாக நடவடிக்கை எடுத்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவு மூலம் அதை ஊழியர்கள் தடுத்தனர். இருந்தபோதிலும் உச்ச நீதிமன்றம் வரை வழக்கை எடுத்துச்சென்று இறுதியில் ஒரு பகுதியினரை மட்டும் பணியில் நியமித்து, மற்றொரு பகுதியினரை வெளியேற்றுவேன் என்று அஞ்சல் இலாகா முறையற்று நடந்துகொண்டுள்ளது.
நியாயமற்ற ஐந்து சத உச்சவரம்பு என்ற நிபந்தனையைக் கைவிட்டு, அனைத்துத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க அரசு ஆணையிடவேண்டும் என்பது 12.12.12 வேலைநிறுத்தத்தின் மூன்றாவது கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment
YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.